இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் ‘செம்பருத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா.
தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோஜா கடந்த 2002ம் ஆண்டு இயக்குனர் செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு ரோஜா நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவ்வப்போது சில படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே தலையை காட்டினார். அதோடு ஆந்திராவில் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நின்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஐதராபாத்தில் வசிக்கிறார். ஆர்.கே.செல்வமணி சென்னையில் இருக்கிறார்.
இந்நிலையில் நட்சத்திர தம்பதியான ரோஜா-ஆர்.கே.செல்வமணி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக பேச்சுக்கள் கிளம்பின. ஆனால் இதனை நடிகை ரோஜா மறுத்துள்ளார். அவர் கூறும் போது, எனது கணவர் சினிமாவில் இருக்கிறார். நான் அரசியலில் இருக்கிறேன். அதனால் எங்களால் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை.
மற்றபடி பிரிந்து விட்டோம் என்று வெளியான செய்திகள் வெறும் வதந்தி. என் கணவரும் நானும் குழந்தைகளும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது கணவர் ஐதராபாத் வந்து எங்களை பார்த்து விட்டு தான் செல்கிறார். என்று விளக்கம் அளித்துள்ளார்.