பர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘நவரச திலகம்’.
இப்படத்தில் மா.கா.பா.ஆனந்த, சிருஷ்டி டாங்கே நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு உட்பட பலரும் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில் படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
ரமேஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் காம்ரன். ராஜ்கபூர், பூபதிபாண்டியன், எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். படம் பற்றி காம்ரன் பேசும்போது, ‘‘நம்மை சுற்றிலும் நண்பர்கள் என்கிற பெயரில் சில நவரச திலகங்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நண்பனின் வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதை!
இதை 90 சதவீதம் காமெடி கலந்து ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாக்கி வருகிறோம். பொள்ளாச்சியில் 60 சதவீதம் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்து விட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி, கும்பகோணம் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைய இருக்கிறது’’ என்றார்.