இந்தியாவில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எழுந்த எதிர்ப்பு மற்றும் மயானத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் நேற்று(20) முதல் பல எதிர்ப்பு பதிவுகள் பதிவான நிலையில், நடிகர் ராஜ்கிரண் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றது.
அவர் வெளியிட்ட பதிவில், ”எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில்நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது,மிகுந்த வேதனையும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.
தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர்,யாரைப்பற்றியும் கவலைப்படாமல், “தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே” என்ற ஒரே இலட்சியத்தோடு, சமூகப்பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இது தான் என்றால் நம் நாடு இதனால் கேவலமடையும்.
இஸ்லாமியனாகப் பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு மாற்றுத்திறனாளிச் சிறுவனின் உடலை புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான் இந்த நாட்டில் சட்டம் என்றால் உலக நாடுகளின் பார்வையில் நம் நாடும் தேசமும் மிகக்கேவலப்பட்டு நிற்கும்.
இதைப்போன்ற கொடுமைகளுக்கு, கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.