நடிகர் நிவின் பாலி உள்ளிட்ட பல மலையாளத் திரைப்பட நடிகர்களுக்கு ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றியவர் ஷபு. குறிப்பாக நடிகர் நிவின் பாலிக்கு கடந்த 2012-ம் ஆண்டிலிருந்தே ஆஸ்தான ஒப்பனை கலைஞர் இவர்தானாம். அவரின் உதவியாளராகவும் இருந்து வந்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று தனது இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்காரம் செய்யும் பணிகளை ஷபு செய்து வந்துள்ளார். அப்போது கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் நட்சத்திரம் கட்ட உயரத்தில் ஏறியபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
விழுந்ததும் நினைவிழந்த ஷபுவைக் குடும்பத்தினர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. உயிரிழந்த ஷபுவுக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஷபுவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.