அறிந்த வரலாறே. சிற்சில தகவற் பிழைகளும் உள்ளனதாம். எனினும், ஈழத்தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடப் புறப்பட்டதற்கான நியாயங்களை அறம் வழுவாது பேசிய படம் ‘மேதகு’.
தலைவர் பிரபாகரன் அவர்களை அப்படியே பிரதியெடுத்தாற்போன்ற முகம் அதில் நடித்த குட்டிமணிக்கு. மேன்மைமிகு இலட்சியத்தின் உறுதி மிளிரும் முகம்.
போராட்டத்தின் தொடக்ககாலத்துடன் நின்றுவிட்டது படம். ‘மேதகு’வின் அடுத்தடுத்த பாகங்களும் வரவேண்டும். ஒரு நெடுந்தொடராக வருவது இன்னும் சிறப்பு. ஈழத்தமிழர்கள் போர்ப் பித்துக் கொண்டு ஆயுதமேந்தினார்கள் என உளறித் திரியும் சில மேதாவிகளது பித்தத்தை அஃது தெளியவைக்கும். அப்படியொரு படத்தையோ நெடுந்தொடரையோ இப்போதுகூட இலங்கையில் எடுக்கமுடியாது என்பதுதான் யதார்த்தம்.
கவிதைத் தொகுப்பொன்றை வெளியிட்டமைக்காக அஃனாஃப் ஜஸீம் என்ற கவிஞரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து, (பிரிவினையைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின்பேரில்) ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வைத்திருக்கிறது இலங்கை அரசு.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தும் அவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. ஆகவே. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் திரைத்துறைக் கலைஞர்களும் தமிழக கலைஞர்களும் ஒன்றிணைந்து ஈழப்போராட்டம் குறித்த நெடுந்தொடரை எடுப்பதே சாத்தியம்.
‘மேதகு’ கட்டாயம் பாருங்கள் நண்பர்களே!
வீரயுகமொன்று முடிந்து போயிற்று; ஆயினும், இப்படியொருவரைத் தலைவராக வாய்க்கப்பெற்றோம் எனும் பெருமிதத்திற்கு என்றும் முடிவில்லை.
கவிஞர் தமிழ்நதி