Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் ஆபத்தை ஏற்படுத்தும் ‘நள்ளிரவு பிரியாணி’

ஆபத்தை ஏற்படுத்தும் ‘நள்ளிரவு பிரியாணி’

2 minutes read

இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும், ஓட்டல்களுக்கு சென்று, நேரம் காலம் பார்க்காமல், பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள்.

ஐ.டி.கலாசாரம், பெரும்பாலானோரின் வாழ்க்கை முறையையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு புரட்டிப்போட்டிருக்கிறது. ஐ.டி.துறையில் பணியாற்றுபவர்கள், மேலை நாட்டு கலாசாரத்திற்கு இணையாக உடை அணிகிறார்கள். பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து பணியாற்றுகிறார்கள். மாத இறுதியில் ‘டீம் அவுட்டிங்’ என சுற்றித்திரிந்து, குதூகலிக்கிறார்கள். இப்படி ஐ.டி.கலாசாரம் நம்மிடம் மேலை நாட்டு பழக்கங்களை, புகுத்தி வருகிறது. இதில் புதிதாக இணைந்திருப்பது, ‘நள்ளிரவு பிரியாணி’.

இரவில் பணியாற்றும் ஐ.டி.துறையினருக்காகவே, நள்ளிரவில் நிறைய ஓட்டல்கள் இயங்குகின்றன. நள்ளிரவு ஓட்டல்கள் என்றவுடன், டீ-காபி, சாண்ட்விச் மற்றும் பன் ரொட்டிகளை தயாரிக்கும் ஓட்டல்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இந்த ஓட்டல்களில், அதிகாலை 3 மணிக்கு கூட, சூடான பிரியாணி கிடைக்கும். அதுவும் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி, சிக்கன், மட்டன், இறால், மீன் என வகைவகையான பிரியாணிகள் சூடாக பரிமாறப்படுகின்றன. பிரியாணி மட்டுமல்ல, சிக்கன் 65, சிக்கன் தந்தூரி, சிக்கன் கபாப் போன்ற காரசார உணவுகளும் பரிமாறப்படுகின்றன. அதனால் நள்ளிரவு ஓட்டல்களில், அதிகபடியான ஐ.டி.ஊழியர்களை பார்க்கமுடிகிறது.

இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும், இதுபோன்ற ஓட்டல்களுக்கு சென்று, நேரம் காலம் பார்க்காமல், பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள். இதையே வழக்கமாக்கி, தினமும் நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது, உடல்நலத்திற்கு கெடுதியாக அமையும் என்கிறார்கள், மருத்துவர்கள். ஏனெனில் இறைச்சியும், பிரியாணியை சுவையூட்டும் எண்ணெய் பொருட்களும், செரிமான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, மனித உடலின் இயல்பான இயக்கத்தையும் சீர்குலைத்துவிடுமாம்.

நள்ளிரவு பிரியாணிக்கு குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்தினால் இருமடங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள். சில ஓட்டல்களில், பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறும் பழக்கம் இருப்பதுண்டு. அப்படி என்றால், பாதிப்பு மிக அதிகம் என பதற வைக்கிறார்கள், மருத்துவர்கள். அதனால் நள்ளிரவில், இதுபோன்ற ‘ஹெவி’ உணவுகளை தவிர்க்கும்படி கூறுகிறார்கள்.

பிரியாணி மட்டுமின்றி, நள்ளிரவில் பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், சாக்லெட், காரமான இறைச்சி, சோடா பானங்களையும் தவிர்க்க சொல்கிறார்கள். நள்ளிரவில் கண்விழித்து பணியாற்ற, டீ-காபி மட்டும் போதுமானது என்பவர்கள், இரவு பசிக்கு இட்லி, இடியாப்பம், தோசை ஆகியவற்றை சாப்பிடுவதுதான் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More