ஒளியை எங்ஙனம் ஒழித்து வைக்க
யாரோ சொன்னான்
இருளுங் குறைந்த ஒளியென
ஒளியில்லா இடத்தைத் தேடி
அடையாப் போதில்
என் வாழ்வே இருளென முகாரித் தென்ன பயன்
நம்பிக்கையில் சொட்டொளியையாவது
பருகின்
பாலும் நீரும் வேறாகுமென்பேன்
ஒளி பற்றி ஒழித்திருந்து
இசைக்க முடியாது
காற்றின் வீசல் போல்
ககனப் பரவல் போல்
அலையின் துடிப்புப் போல்
ஆத்மாவில் ஆழ் ஒளி ஊறின்
இருண்ட யுகத்தின் பாடல்களில்க் கூட
பொருண்மை மாறும்
காருண்யம் ஏறும்
ஆத்மாவின் ஆழ் ஒளியால்
மீண்ட கிரோசிமா நாகசாகி போல்
மீண்ட இஸ்ரேலியர்கள் போல்
மீண்ட கட்டலேனியா போல்
மீண்ட குர்திஸ்தானியர் போல்
மீட்சி மிசையாகும்
இனி ஒளியை ஒழித்து வைக்கப் போவதுமில்லை
தேடப்போவதுமில்லை
யாராவது என்னை நோகடித்தால்
யாராவது என்னை அடிமைப் படுத்தினால்
யாராவது என்னை சுமந்தபடியிருந்தால்
யாராவது என்னில் சவாரி செய்தால்
நான் ஒளியை எடுத்து அருந்துவேன்
ஒளி ஒரு விடுதலை
ஒளி ஒரு தாலாட்டு
ஒளி ஒரு தியானம்
ஒளி ஒரு ஔடதம்
ஒளி ஒரு கடவுள்
ஒளி ஒரு வழி ……………..என்றவாறு
த.செல்வா
இரவு 9.05
மலை