2
கயமைக் குணத்தினர்
கலவிக்கூடங்களாகியது அவலம்
பள்ளி அறைகள் சில
பண்பற்ற மாக்களால்
பள்ளியறை ஆனதொரு அவலம்
அரும்பெரும் கல்வியாளர்கள்
ஆளுமையை நீக்கி அங்கு
அரசியலார் புகுந்ததொரு அவலம் .
கள்ளுண்டு போதையோடு
பள்ளிக்குள் வந்து ஆசிரியர்
பாடம்நடத்திடும் ஓர் அவலம்
பள்ளிக் கட்டணமென்று
கொள்ளையடிக்கும் கூட்டம்
பள்ளிகள் நடத்துகின்ற அவலம் .
மதிப்பெண்ணே குறியென்று
மாணவரை மழுங்கடிக்கும்
மதிகெட்ட கூட்டமொரு அவலம்
அத்தனையும் தெரிந்திருந்தும்
அக்கிரமம் களையாமல்
அரசாங்கம் இருக்குமொரு அவலம்
கடைநிலையில் உள்ளவரையும்
கடைத்தேற்றும் கல்வி இன்று
கடைத்தெருவில் நிற்பது பெரும் அவலம் .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்