கிளி மக்கள் அமைப்பின் (கிளி பீப்பிள்ஸ்) மண்ணின் மைந்தன் விருது வழங்கும் நிகழ்வு இன்று 16ஆம் திகதி லண்டனில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சியில் விஞ்ஞானக் கல்வி நிலையத்தை ஸ்தாபித்த கிளிநொச்சியின் மூத்த ஆசிரியர் பேராசான் எட்வேட் மாறியதாசஸ் அவர்கள் இம்முறை விருதைப் பெறுகிறார். கற்றலுக்கான தேடலையும் தளத்தையும் இவர் உருவாக்கிய வரலாறானது வன்னிப்பிரதேச இலக்கியங்களில் செறிந்துகாணப்படுகின்றது.
77ஆம் ஆண்டு இன வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில் அடைக்கலம் புகுந்த நாட்களில் 80களில் இவர் உருவாக்கிய கல்விப் புலம் பெரும் பணியாற்றியது.
கணிதபாடம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் கிளிநொச்சி பெரும் கல்விச் சாதனைகளை செய்ய இவரது கல்விப் பணி அடிப்படையாக இருந்தது.
வசதிகள் குறைந்த அந்தக் காலகட்டத்தில் வெளிமாவட்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லாமல் கிளிநொச்சியிலேயே படித்து பொறியியலாளராக, வைத்தியராக வர களம் அமைத்த பெருமை இவரைச் சாரும்.
கிளிநொச்சியினதும் தமிழர் தேசத்தினதும் கல்வி மேம்பாட்டிற்காக கிளி மக்கள் அமைப்பு முன்னெடுக்கும் இன்றைய மாபெரும் ஒன்றுகூடலில் சுமார் ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் வன்னியின் மூத்த ஆசான், கிளிநொச்சியின் மைந்தன் மரியதாஸ் அவர்களுக்கு விருது வழங்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
-வணக்கம் இலண்டனுக்காக பூங்குன்றன்