அணில் தின்ற மீதிக்கொய்யா!
கிளி கொத்திய மாம்பழம்!
மாமரத்தில் உடைத்து
வாயூறத்தின்ற மாங்காய்!
கல்லெறிந்து விழுத்தி
கோதுடைக்கும் புளியம்பழம்!
உதடொற்றி தேனூறும்
காட்டுப் பாலைப்பழம்!
வெற்றிலைச் சிவப்பை
நாக்கில் பூசும் வீரப்பழம்!
வயதுக்கு வந்த முந்திரிப்பழம்!
முள்ளிருந்தும் குத்தாத பலாப்பழம்!
பின்னாலேயே கூட்டிச் செல்லுமென்று
பாட்டி பயம் காட்டிய பனம்பழம்!
குடும்பமாய்ப் பழுக்கும்
பப்பாசிப்பழம்!
சுட்ட பழம் வேண்டுமா என
முருகன் மொழி பேசும்
மண்ணில் விழுந்த நாவற்பழம்!
முள்குத்தி ரசித்துப் பறிக்கும்,
கொத்துக்கொத்தாய்
மரத்திலேயே பழுத்த
ஊரெல்லை ஈச்சம்பழம்!
முற்றிப் பழுக்கக் காத்திருந்து
சிறுவனாய்க் குலை தூக்கி
சாமியறையில் தியானமிருக்கும்
கிணத்தடி வாழைப்பழம்!
கிராமத்து மனிதர்களைப்போல
நகரத்தில் இவையெதுவும்
அதே ருசியில் ஒருபோதும்
கிடைப்பதேயில்லை!!!
-சி. கிரிஷாந்த்ராஜ்