அமுதா மீண்டும் இலங்கைக்கு வருகிறாள். கடந்த முறை ஒன்பது வயதுச் சிறுமியாக தன்னைப்பெற்ற தாயைத்தேடி வளர்ப்புத் தாய், தந்தையோடு வந்தவள் இன்று கணவனோடும் கைக்குழந்தையோடும் வந்திருக்கிறாள். இப்பாது இங்கு குண்டுவெடிப்புகள் இல்லை. துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் இல்லை.
தீப்பிழம்புகள் இல்லை. எல்லாமே மாறியிருந்தன. ஆனாலும், வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் காட்சி அவள் கண்களுக்குள்ளேயே இருந்தது. பெருமூச்செறிந்தவளாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்குப் புறப்படுகிறாள்.
வவுனியா மாங்குளம், அம்மாவின் பெயர் ஷாமா. இதைத்தவிர வேறெதுவும் அமுதாவிற்கு தெரியாது. ஆயுதப்போர் மெளனித்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. அம்மாவைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் ஒரு கைப்பையும் மாத்திரமே அமுதாவிடம் இருக்கிறது. பழைய மாங்குளம் இப்போது இல்லை. அமுதா, சீருடையில் பலரைக் காண்கிறாள். 12 வருடங்களுக்கு முன்னர் கண்ட அந்தச் சீருடையில்லை. இவர்கள் தமிழ் பேசுபவர்களும் அல்ல.
பல இடங்களிலும் தேடியலைந்து சோர்ந்து போகிறாள். தாய் ஷாமாவைக் கடைசியாகக் கண்ட அந்தப்பூங்காவில் அமுதா அமர்ந்திருக்கும்போது, அம்மா என்று கூப்பிட்டதும், “அப்பிடி கூப்பிடாத, அப்பிடிக்கூப்பிட்டா என்னால போக ஏலாது” என்று ஷாமா சொன்னதையும் கனத்த இதயத்தோடு நினைத்துப் பார்க்கிறாள் அமுதா.
“கச்சான் கச்சான்…” என்ற கூவல் சத்தம் கேட்கிறது. “தங்கச்சி ஒரு பக்கற் என்டாலும் வாங்குறியா” இவன் வெறும் கச்சான் வியாபாரியல்ல. வலியையும் வரலாற்றையும் சுமப்பவன். அமுதாவின் கண்ணீரைக் கண்டதும் கதையைக் கேட்கத் தொடங்குகிறான். கேட்டுவிட்டு, அமுதாவுக்காகவே இந்தப் பூங்காவில் பல வருடங்களாக கச்சான் விற்க வருவதாகவும் சொல்கிறான். ஆம், இவன்தான் ஷாமாவின் அண்ணன். “நீ எப்பிடியும் ஷாமாவத்தேடி வருவ என்டு தெரியும், அதுக்காகத்தான் நான் இஞ்சேயே கச்சான் விக்கிறன்” அமுதாவினால் அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது. ஏனென்றால், இவனுக்கு ஒரு கையும் ஒரு காலும் இல்லை. அவனின் உடலின் நிலையை அமுதாவின் மனம் அடைகிறது.
“நீ வந்தா குடுக்கச்சொல்லி ஷாமா தந்த கடிதம் இது” பல வருடங்களாக பத்திரப்படுத்தி வைத்திருந்த அன்பின் பொக்கிஷத்தைக் கொடுக்கிறான். வாசித்துவிட்டு கதறியழுகிறாள் அமுதா. அமுதா முன்னர் கேட்க விரும்பிய இருபது கேள்விகளுக்கான பதிலை இந்தக் கடிதம் தாங்கியிருந்தது.
“அம்மாவோட கல்லறயப் பாக்க முடியுமா?” அவனிடம் பதில் இல்லை. அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்த ஓரிடத்திற்குச் சென்று மண்ணைத் தோண்டி பொலித்தீனில் சுற்றப்பட்டிருந்த ஒரு பொதியை எடுக்கிறார்கள். சிதைவோடு ஷாமாவின் உடை அவளின் நினைவாக மகளுக்காக அதில் சுற்றப்பட்டிருந்தது. அதைக்கட்டியணைந்து அழுதவளாக அங்கிருந்து புறப்படுகிறாள். ஒரு கையில் கைக்குழந்தை மறு கையில் அந்தப் பொக்கிஷப் பொதி. இரண்டுமே பொக்கிஷங்கள்தானே!
அமுதாவின் பயணப்பொதி விமான நிலையத்தில் சந்தேகத்தில் சோதிக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தில் அமுதா கைது செய்யப்படுகிறாள். கணவனும் குழந்தையும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுகிறார்கள். ஆம்… ஷாமாவின் நினைவாகக் கிடைத்த அந்த ஆடைதான் காரணம். அது ஷாமாவின் சீருடை!!!
‘கன்னத்தில் முத்தமிட்டால் பாகம் மூன்று தொடரும்’ அமுதா வருவாள்!
சி்.கிரிஷாந்த்ராஜ்