இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் டெசோ ஆர்ப்பாட்டம் தமிழர்களின் குரலை எதிரொலிக்கும் ஆர்ப்பாட்டம் என்று தி மு க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற டெசோ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய கருணாநிதி மேலும் தெரிவிக்கையில், இது ஏதோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் விளம்பரத்திற்காக அல்ல இது ஒரு கட்சியினுடைய குறிப்பிட்ட கொள்கை அல்ல. இது தமிழர்களுடைய குரலை எதிரொலிக்கின்ற நிகழ்ச்சி. ‘டெசோ” இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை – குறிப்பாக நான்கு தீர்மானங்களை – செயல் வடிவம் கொடுக்க தமிழர்களுக்கு நினைவூட்டுவதற்காக நடைபெறுகின்ற நிகழ்ச்சி தான் இந்த ஆர்ப்பாட்டமாகும் எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும் இலங்கையில் நடைபெறவுள்ள ‘கொமன்வெல்த்” மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும் தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க உடனடியாக வெறும் பேச்சு இல்லாமல் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும் இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் தொடர் நிகழ்ச்சியாக ஆகி விட்டதைக் கண்டித்தும், அதைத் தடுக்க வேண்டுமென்பதை இந்திய அரசுக்கு எடுத்துக்காட்டியும் டெசோ அமைப்பு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்னையில் திமுக தலைவர் கலைஞர், மதுரையில் கி.வீரமணி, திருச்சியில் மு.க.ஸ்டாலின், திருவள்ளூரில் தொல்.திருமாவளவன், கோவையில் சுப்புலட்சுமி ஜெகதீசன், காஞ்சிபுரத்தில் துரைமுருகன், வேலூரில் வி.பி. துரைசாமி, உதகையில் ஆலந்தூர் பாரதி, திருப்பூரில் கோவை. மு. இராமநாதன், நாகப்பட்டினத்தில் அ.இரகுமான்கான், திண்டிவனத்தில் திருச்சி என்.சிவா, திருநெல்வேலியில் பொன்.முத்துராமலிங்கம், இராமநாதபுரத்தில் கடலூர் இள.புகழேந்தி, விருதுநகரில் பேரூர். அ.நடராஜன், தஞ்சாவூரில் குஷ்பு சுந்தர், நாமக்கல்லில் வாகை சந்திரசேகர், அரியலூரில் நடிகர் குமரிமுத்து, ஈரோட்டில் திண்டுக்கல் ஐ. லியோனி ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.