இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்ததையடுத்து, மேலும் 5 நாள்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு தரப்பினரும் வியாழக்கிழமை சம்மதித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்தம் புதன்கிழமை நள்ளிரவு முடிவுக்கு வந்தவுடனேயே, இஸ்ரேல் மீது ஹமாஸின் ஏவுகணைகள் பாய்ந்தன.
அதற்குப் பதிலடியாக, இஸ்ரேலும் வான் வழித் தாக்குதலில் ஈடுபட்டது.
இதனால், மூன்று நாள்களாக நிலவி வந்த அமைதி அத்துடன் முடிவடைந்ததோ என்ற பீதி, காஸா மக்களிடையே பரவத் தொடங்கியது.
எனினும், சண்டை நிறுத்தத்தை மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிப்பதாக இஸ்ரேல் அரசும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டதற்கேற்ப, அந்த எதிரெதிர் தாக்குதல்கள் விரைவிலேயே அடங்கிப்போயின.
அதனைத் தொடர்ந்து, மக்கள் மீண்டும் சாலைகளுக்கு வரத் தொடங்கினர்.
எனினும், புதன்கிழமை இருந்த அளவுக்கு மக்கள் கூட்டத்தை சாலைகளில் பார்க்க முடியவில்லை.
தற்போது அமலுக்கு வந்துள்ள ஐந்து நாள் போர் நிறுத்தம், வரும் திங்கள்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.
கடந்த மாதம் 8-ஆம் தேதி “ஆப்பரேஷன் புரொடக்டிவ் எட்ஜ்’ என்ற பெயரில் இஸ்ரேல் தொடங்கிய இந்தச் சண்டையில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்..