உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைன் பகுதிக்கு நிவாரணப் பொருள்கள் கொண்ட ரஷ்ய லாரிகள் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றன.
உக்ரைன் அனுமதி தராததால் இந்த லாரிகள் ரஷ்ய பகுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக நின்றிருந்தன. நியாயமற்ற முறையில் இந்த லாரிகள் தடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ரஷ்யா, வெள்ளிக்கிழமை இந்த லாரிகளை தன்னிச்சையாக உக்ரைன் எல்லைக்குள் அனுப்பியது.
சண்டை நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு இவற்றை அனுப்பி வைத்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. என்றாலும் இந்த லாரிகள் கிளர்ச்சியாளர்களின் பாதுகாப்புடன் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த லாரிகளை உக்ரைன் எக்காரணம் கொண்டும் தடுக்கக் கூடாது என்று ரஷ்ய வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது. இந்த லாரிகளில் குடிநீர், ஜெனரேட்டர்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பொருள்கள் இருப்பதாக தெரிகிறது. இவை கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் நகருக்கு செல்வதாக கூறப்படுகிறது.
கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இந்நகரை அரசுப் படைகள் முற்றுகையிட்டுள்ள நிலையில் அங்கு பல கடந்த வாரங்களாக மோதல் நடந்து வருகிறது. சண்டை நிறுத்தம் மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை இருதரப்பினரும் நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் இந்த செயல் உக்ரைன் மீதான நேரடி ஆக்கிரமிப்பு என்று உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.