சிரியாவில் தலை துண்டித்து நிருபர் படுகொலை எதிரொலி: தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவோம்: அமெரிக்கா அறிவிப்பு.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்கு பல நகரங்களை கைப்பற்றியுள்ள அவர்கள் இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர்.
சிரியாவில் போர் செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிக்கை நிருபர் ஜேம்ஸ் போலேவை தீவிரவாதிகள் பிடித்து வைத்து பிணை தொகை கேட்டு பேரம் பேசினர். அவற்றை தர அமெரிக்க அரசு மறுத்து விட்டது. எனவே, அவரை தலைதுண்டித்து கொலை செய்தனர். அந்த வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தினர்.
ஈராக்கில் தீவிரவாதிகள் மீது தாக்குதலை நிறுத்தாவிட்டால் பிடித்து வைத்துள்ள மற்றொரு நிருபரையும் இதே போல் கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர். மேலும் அமெரிக்கர்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2001-ஆம் ஆண்டு அமெரி்ககாவில் இரட்டை கோபுரங்களை தகர்த்து அல்-கொய்தா தீவிரவாதிகள் மிகப்பெரும் தாக்குதல் நடத்தி கடும் சேதத்தை விளைவித்தனர். அதுபோன்று மீண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா கருதுகிறது. மேலும் தீவிரவாதிகளின் மிரட்டல் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தற்போது ஈராக்கில் அந்த தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டு வருகிறது. அதுபோன்று சிரியாவிலும் தீவிரவாதிகள் மீது குண்டு வீச அமெரி்ககா முடிவு செய்துள்ளது.
இந்த தகவலை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென்ரோத்ஸ் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில் சிரியாவில் உள்ள தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது அவசியமாகிவிட்டது. பணையத்தொகை கொடுத்து கைதிகளை மீட்பது என்பது சரியான கொள்கை அல்ல. மேலும் தீவிரவாதிகளிடம் இருந்து மற்ற நாடுகளை காப்பதும் அமெரிக்காவின் கடமையாகும்.
எனவே, சிரியாவில் தீவிரவாதிகள் மீது குண்டு வீசி அவர்களை அழிப்போம் என தெரிவித்துள்ளார். இதை பென்டகனும் உறுதி செய்துள்ளது.