பாகிஸ்தானில் தொலைக்காட்சி செய்தியாளராக உள்ள அஸ்மா ஷிராஸி என்பவர் 2014-ஆம் ஆண்டுக்கான பீட்டர் மேக்லர் சர்வதேச சிறந்த செய்தியாளர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பீட்டர் மேக்லர் விருது தீரம்-நெறி மிகுந்த செயல்பாடுகளுக்காக அளிக்கப்படுகிறது. 2014-ஆம் ஆண்டுக்கான விருதுக்காக அஸ்மா ஷிராஸி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் 2006-ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேல் – லெபனான் போர், பாகிஸ்தான் – ஆப்கன் எல்லையில் தலிபான் வன்முறை உள்ளிட்டவை குறித்து அப்பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று செய்தி சேகரித்தார்.
2007-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியபோது, அது குறித்து சிறப்புச் செய்தி அளித்தார். இவரது நிகழ்ச்சிக்கு அதிபர் முஷாரஃப் தடை விதித்தார்.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நிலையிலும், பாரபட்சமின்றி பாகிஸ்தான் முழுவதும் சுதந்திரமாகச் செய்தியைப் பரப்பச் செய்த அஸ்மா ஷிராஸ், செய்தியாளருக்கே உரிய நெறியுடன் பணியாற்றியுள்ளார்.
அவரது தீரத்தைப் பாராட்டுகிறோம் என்று விருதளிக்கும் அமைப்பின் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த விருது, வரும் அக்டோபர் மாதம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் வழங்கப்படுகிறது.