அமெரிக்காவின் சிக்காகோ நகரின் வெஸ்ட் லாரன்ஸ் அவென்யூவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கடந்த 2012-ம் ஆண்டு 80 வயது முதியவர் ஒருவரை சந்தித்த பெப்பில்ஸ் மில்லர்(28) என்ற பெண் அவருடன் நெருங்கிப் பழகிவந்த வேளையில் தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும், மருத்துவ செலவுக்கு பணம் தந்து உதவும்படியும் கேட்டுள்ளாள்.
இளம்வயதிலேயே இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு கொடுமையான வியாதியா? என்று மனமிறங்கிய அந்த முதியவர், அவளை சந்திக்க வரும் போதெல்லாம் காசோலை மூலமாகவும் வங்கி பரிவர்த்தனை வாயிலாகவும் சுமார் ஒரு லட்சம் டாலர்கள் அளவுக்கு உதவி செய்துள்ளார்.
ஒருகட்டத்தில், முதியவரின் கையிருப்பு மொத்தமும் கறைந்துவிட்ட நிலையில், சிக்காகோவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் அவளுக்கு உதவி செய்ய முயன்ற அவர், அந்தப் பெண்ணைப் பற்றிய தகவலை அவர்களுக்கு அளித்துள்ளார்.
நோயாளியின் உண்மைத்தன்மையைப் பற்றி ஆராய முடிவு செய்த அந்த தொண்டு நிறுவனம், அந்தப் பெண்ணைப் பற்றி உளவறிந்ததில், புற்றுநோய் பாதித்ததாக அவள் நாடகமாடியது தெரிய வந்தது. இந்த தகவலை பரிந்துரை செய்த முதியவருக்கு அவர்கள் தெரிவிக்க, பாதிக்கப்பட்ட முதியவர் அந்த பெண்ணின் மீது போலீசில் புகார் அளித்தார்.
1-5-2013 அன்று அவளை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து குக் கவுண்ட்டி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இது தொடர்பாக நடந்துவந்த வழக்கு விசாரணையின் நிறைவாக நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, மூத்த குடிமகன் ஒருவரை ஏமாற்றி, அவரது சேமிப்பு பணமான சுமார் ஒரு லட்சம் டாலர்களை மோசடி செய்த பெப்பில்ஸ் மில்லருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.