பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள சக்திவாய்ந்த எரிமலை சீற்றத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.
தலைநகர் மணிலாவில் இருந்து 350 கி.மீட்டர் தொலைவில் மேயான் எரிமலை உள்ளது. இந்த எரிமலை ஒரு வாரத்துக்குள் வெடித்து தீக்குழம்புகளை வெளியேற்றும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
எரிமலையை சுற்றி 6 கி.மீட்டர் தொலைவு பரப்பளவு அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான சுற்றுத் தலங்களும் உள்ளன. அங்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2006 ஆகஸ்டில் இந்த எரிமலை வெடித்தது. ஆனால் அப்போது உயிரிழப்பு ஏற்படவில்லை. அதே ஆண்டு டிசம்பரில் கடும் புயல் வீசியது. இதில் தொடர்ந்து சீறிக் கொண்டிருந்த எரிமலையின் குழம்புகள் காற்றில் அள்ளி வீசப்பட்டதில் 1000 பேர் உயிரிழந்தனர்