பசிபிக் கடல் பகுதியில், அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவுக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலில் 160 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகியது. பூமியில் மிக ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படும் வாய்ப்பில்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்தது. மேலும் அருகில் உள்ள குவாம் தீவுப் பகுதியும் கடும் பாதிப்பில் இருந்து தப்பியது. “இந்த நிலநடுக்கம் கடுமையாகவும் நீடித்த ஒன்றாகவும் இருந்தது என்றாலும் கட்டிடங்களில் கடுமையான சேதம் இல்லை” என்று குவாம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குவாம் தீவில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இத்தீவுப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. என்றாலும் மிக அரிதாகவே சுனாமி பாதிப்பு ஏற்படுகிறது.