சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்ததை தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 6 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இதில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் குன்ஹா 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்துள்ளார். இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா பதவி இழக்கும் நிலை உருவாகி உள்ளது.
இதையடுத்து, புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2001ல் வழக்குகளில் சிக்கி ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்தார். இந்த முறையும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்ததும், கோர்ட் அறையில் இருந்த ஒ.பன்னீர்செல்வத்துடன் ஜெயலலிதா சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால், பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி உறுதி என்று கூறப்படுகிறது.