வடகொரியாவும், தென்கொரியாவும் தொடர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. இதை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வரவேற்றுள்ளார்.
கொரியா– வடகொரியா, தென்கொரியா என 1948–ம் ஆண்டு இரண்டாக பிரிந்தது. 1950–53 ஆண்டுகளில் இவ்விரு நாடுகள் இடையே போர் நடந்தது. அந்தப் போருக்கு பின்னர் இரு நாடுகளும் பரம எதிரிகளாக உருவெடுத்தன. சமீப காலமாக இவ்விரு நாடுகள் இடையே பனிப்போர் தீவிரமானது.
கடந்த ஆகஸ்டு மாதம் தென்கொரியாவும், அமெரிக்காவும் கொரிய தீபகற்ப பகுதியில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டபோது, வடகொரியா ஆத்திரம் அடைந்தது. பயிற்சியின்போது ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா மிரட்டலும் விடுத்தது.
ஆனால் இப்போது இரு நாடுகள் இடையே ஒரு இணக்கமான சூழல் உருவாகி உள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் வடகொரியாவுக்கு, மனித நேய உதவிகளை செய்வதற்கு தனது நாட்டின் தனியார் தொண்டு அமைப்புகளுக்கு தென் கொரிய அதிபர் பார்க் அனுமதி அளித்தார். வடகொரியா பதற்றத்தை தணிக்க முன்வந்தால் மேலும் உதவிகள் செய்யத்தயார் என அவர் வாக்குறுதியும் வழங்கினார்.