சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், துக்கம் தாங்காமல் இறந்தவர்கள் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் தனி கோர்ட்டில் கடந்த 27ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததால் தமிழகத்தில் அதிமுக கட்சி பிரமுகர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். சிலர் துக்கம் தாங்காமல் தீக்குளித்தும், மாரடைப்பு ஏற்பட்டும், பஸ் மற்றும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால் கடந்த 27ம் தேதி முதல் நேற்று வரை 100 பேர் தங்கள் உயிரை விட்டுள்ளதாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு 71 பேரும், தூக்கில் தொங்கி 13 பேரும், தீக்குளித்து 9 பேர், விஷம் அருந்தி 3 பேர், ரயில் முன் பாய்ந்து 2 பேர், பஸ் முன் பாய்ந்து ஒருவர், ஆற்றில் குதித்து ஒருவர் என மொத்தம் 100 பேர் மரணம் அடைந்துள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.