எபோலா உயிர்கொல்லி வைரஸ் நோய் தாக்குதலுக்கு, அமெரிக்காவில் ஒருவர் பலியாகியுள்ளார். அவருடன் தொடர்பு வைத்திருந்த, பத்துக்கும்
மேற்பட்டோர் தனிமைபடுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப் படுகின்றனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளான லைபீரியா, நைஜீரியா, கினியா மற்றும் சியாரா லியோன் நாடுகளில் எபோலா நோய் தாக்குதல் அதிகம் உள்ளது. அங்கு இந்நோய் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 3,400ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், லைபீரியாவை தாய்நாடாக கொண்ட அமெரிக்கர், தாமஸ் எரிக் டன்கன் என்பவர், கடந்த மாதம் லைபீரியாவில் சில நாட்கள் இருந்து விட்டு, செப்டம்பர் 20ல், அமெரிக்காவின் டல்லாஸ் விமான நிலையம் வந்திறங்கினார்.
லைபீரியாவில் விமானம் ஏறும் போதும், டல்லாஸ் விமான நிலையத்தில் வந்திறங்கிய போதும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், அவருக்கு எபோலா நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்படவில்லை. அமெரிக்காவில் வந்திறங்கிய இரண்டொரு நாட்களில், எரிக் டன்கனுக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றை நாடி சிகிச்சை பெற்றார். சாதாரண காய்ச்சல் என கருதி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வீடு திரும்பிய டன்கன் ஒருநாள் நன்றாக இருந்தார். மறுநாள் அவரின் நிலைமை மிகவும் சீரியஸ் ஆனதும், அவரின் குடும்பத்தினர்
டன்கனை, மருத்துவமனையின், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், டன்கனுக்கு எபோலா தாக்குதல் இருப்பது தெரிய வந்தது. தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், கடந்த 8ம் தேதி டன்கன் இறந்து விட்டார். அமெரிக்காவில் எபோலா நோய் தாக்குதலுக்கு முதல் பலி
ஏற்பட்டது. இதையடுத்து, டன்கனுடன் தொடர்பு வைத்திருந்த குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவர்கள் என, 10க்கும் மேற்பட்டோர் தனிமைபடுத்தப்பட்டு, அவர்கள் உடல் நிலை கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள், 21 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். அதன் பிறகு தான் அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவர்.