24 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி ரயில் இன்று யாழ்ப்பாணத்தினை சென்றடைந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை இன்று திறந்துவைக்கப்பட்டது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு கடந்த 29 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்தது. அப்போது தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் போர் தீவிரமாக நடந்தது.
அப்போது வடக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணம் ரெயில் நிலையம் பல முறை தாக்குதலுக்கு ஆளானது. கடந்த 1990–ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த கடும் சண்டையின் போது இப்பகுதியில் இருந்த ரெயில் தண்டவாளங்கள் சேதம் அடைந்தன.
அதை தொடர்ந்து அங்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2009–ம் ஆண்டு போர் முடிவடைந்தது. அதையடுத்து இப்பகுதியில் மீண்டும் ரெயில்வே தொடங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்தது.
அதற்கான பணியில் இந்திய ரெயில்வே துறை ஈடுபட்டது. திட்ட இயக்குனர் ஷியாம் லால் குப்தா தலைமையில் மீண்டும் ரெயில் பாதை சீரமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடந்தது.
உள்நாட்டு போரின் போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகள் மற்றும் விஷ பாம்புகள் நிறைந்த வனப் பகுதிகளில் ரெயில் பாதை அமைக்கும் பணி மிகவும் கடினமானதாக இருந்தது.
இருந்தும் அப்பணிகளை ரெயில்வே கட்டுமான நிறுவனம் வெற்றிகரமாக செய்து முடித்தது. அதை தொடர்ந்து 3 ஆண்டுகளில் 146 கி.மீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டது. இதற்காக ரூ.4800 கோடி செலவிடப்பட்டுள்ளது.