பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
பாலஸ்தீனப் பிரச்னைக்கு முடிவு கட்டும் “தனி நாடு தீர்வை’ வலியுறுத்தி, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் இதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
650 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையில், பாதிக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 274 உறுப்பினர்களும், எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
“இஸ்ரேல் நாட்டின் அருகில் அமைந்துள்ள தனி நாடாக, பாலஸ்தீனத்தை பிரிட்டிஷ் அரசு அங்கீகரிக்கிறது’ என அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் காஸாவில் நடைபெற்ற போருக்குப் பின்பு, பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட இந்தத் தீர்மானம் வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் என்று தெரிவித்த எம்.பி.க்கள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தீர்மானத்தை ஆதரித்து, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு எம்.பி.களும் வாக்களித்தனர்.