தீபாவளி போனஸாக, தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய கார்கள்,தங்கம் வைர நகைகள், புத்தம் புது வீடுகள் என அள்ளிக் கொடுத்து அசத்தி உள்ளார் சூரத் நகரின் வைர நிறுவன முதலாளி ஒருவர்.
இந்த நவீன வள்ளலின் பெயர் சாவிஜி தோலக்கியா. தனது சிறிய வயதில் கையில் சல்லிக்காசு இல்லாமல் சூரத் நகருக்கு 70 களில் வேலை தேடி வந்தார். தனது மாமா ஒருவரின் உதவியால், சிறிய அளவில் வைர நகை விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கினார்.
பல்வேறு போராட்டங்கள், போட்டிகளில் வென்று கடந்த 1992 ஆம் ஆண்டு `ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் ` என்ற வைர நகைகள் ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கினார்.
வியாபாரம் சக்கைப் போடு போட்டு வருகிறது. ஆண்டு தோறும் தனது நிறுவன உயர்வுக்கு பாடுபடும் ஊழியர்களுக்கு விதவிதமாக தீபாவளி பரிசு கொடுத்து அசத்துவது சாவிஜி தோலக்கியாவின் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 1200 ஊழியர்களுக்கு கார்கள், வீடுகள், தங்கம் மற்றும் வைர நகைகள் என 50 கோடி ரூபாய்க்கு அள்ளிக் கொடுத்து உள்ளார்.
சாவிஜி தோலக்கியாவின் நிறுவனம், வருடத்திற்கு 6,000 கோடி ரூபாய் நிகர வருமானம் பெறும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.