அமெரிக்க பள்ளி ஒன்றின் கேன்டீனில், மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மாணவி பலியானதோடு, மற்ற நான்கு பேர் காயம் அடைந்தனர். பின், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தான்.
அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ளது மேரிஸ்வில்லி நகரம். இங்குள்ள உயர் நிலைப்பள்ளியின் கேன்டீனில், நேற்று முன்தினம் ஜெய்லன் பிரேபெர்க் என்ற மாணவன், திடீரென மற்ற மாணவர்களை நோக்கி, கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டான்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருத்தி பலியானதோடு, தலா இரண்டு மாணவியரும், மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மாணவ, மாணவியரில் இருவர், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனின் உறவினர்கள் என, கூறப்படுகிறது. பின், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன், தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டு இறந்தான்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவன் ஒருவன் சம்பவம் பற்றி கூறுகையில், ”மாணவன் ஜெய்லன் பிரேபெர்க், மாணவி ஒருத்தி மீது, காதல் கொண்டிருந்தான். அதில், பிரச்னை ஏற்பட்டதால், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டான். பிரேபெர்க்கால் சுடப்பட்டவர்களில், அவன் காதலித்த மாணவியும் அடங்கும்,” என்றார். பிரேபெயர் பயன்படுத்திய துப்பாக்கி, அவனின் தந்தையுடையது என்றும், அதிக திறனுடையது என்பதும் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து, பள்ளி மூடப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. அமெரிக்காவில், பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்வது, இந்த ஆண்டில் இது, 2 வது சம்பவமாகும்.