மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டியை குணப்படுத்த, இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானி, டாக்டர் காலித் ஷா என்பவர், ஸ்டெம் செல்களை கண்டறிந்து உள்ளார். அமெரிக்கா ஹார்வர்டு ஸ்டெம் செல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், அங்குள்ள மஷாசூசெட்ஸ் தலைமை மருத்துவமனையில் டாக்டர் காலித் ஷா தலைமையில் மேற்கொண்ட ஆய்வு மற்றும் பரிசோதனைகளில், புற்றுநோய் செல்களை கொல்லும், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ஸ்டெம் செல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டெம் செல், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை கொல்வதுடன், நல்ல நிலையில் உள்ள செல்களை பாதிக்காத வகையில் உள்ளது.
இக்கண்டுபிடிப்பு பல்வேறு ஆராய்ச்சிகளை தாண்டித்தான் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பிற்கு முக்கிய பங்காற்றிய டாக்டர் காலித் ஷா இந்தியாவின் காஷ்மீரை பூர்வீகமாக கொண்டவர். புற்றுநோய்க்கு செல்கள் மூலம் தீர்வு காண்பதில் இது ஒரு முக்கிய தொடக்கமாக அமையும் என உலகின் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.