பிரிட்டன் பிரதமர் பதவியை ஆசியர் ஒருவர் அலங்கரிப்பார் என்று தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“ஒரு நாள், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஆசியர் ஒருவர் பெயருக்கு பின்னால் பிரதமர் என்ற பதவி பின் தொடரும் என்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன், ஆனால் உடனடியாக இல்லை”என்று டேவிட் கேமரூன் விருது நிகழ்ச்சியில், லண்டனில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் 2015-ஆம் ஆண்டு மே, மாதம் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.
அவர் மேலும் கூறும்போது, “பிரிட்டனின் வெற்றிக்குப் பின்னால் ஒவ்வொரு சமுகத்தின் பங்களிப்பும் உள்ளது. ஆனால் வெளிப்படையாகக் கூறவேண்டுமெனில் இது போதவில்லை. பிரிட்டனில் இனக்குழு சிறுபான்மையினர் இன்னமும் உயர் பதவிகளில் இல்லை என்பதே உண்மை.
நாடாளுமன்றம், கால்பந்து மேலாளர் பதவிகள், உயர் நீதிமன்ற நீதிபதிப் பதவிகள், நமது போர் விமானங்கள், கடற்படை என்று சிறுபான்மை சமூகத்தினர் உயர் பதவிகளில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும், இந்த நிலை மாற வேண்டும்” என்றார் டேவிட் கேமரூன்.
இந்த ஆண்டின் சிறந்த நபர் விருதை இந்திய வம்சாவளி தொழிலதிபர் ராமி ராஞ்சர் பெற்றார். இவர் சன்மார்க் நிறுவனத்தின் சி.இ.ஓ. என்பது குறிப்பிடத்தக்கது.