விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவின் பாதுகாப்புக்காக பிரிட்டனின் காவல் துறை 10 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளது.
அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசு ரகசிய கோப்புகளை தனது விக்கிலீக்ஸ் வலைதளத்தில் அசாஞ்சே வெளியிட்டார். இது தொடர்பாக அமெரிக்கா இவர் மீது நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறது.
இந்நிலையில், அவர் லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு தஞ்சம் புகுந்தார்.
இதனிடையே, ஸ்வீடனில் 2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியேறினால், பாலியல் வழக்கை சந்திக்க ஸ்வீடனுக்கு அவர் நாடு கடத்தப்படுவது நிச்சயம் என்ற நிலையில் அவர் தூதரகத்திலேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.
இதன் காரணமாக ஈக்வடார் தூதரகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதற்கான செலவு குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், எல்.பி.சி. ரேடியோ எனும் செய்தி வானொலி நிலையம் விவரம் கேட்டது.
இதையடுத்து, பிரிட்டிஷ் காவல் துறையான ஸ்காட்லாந்து யார்டு அளித்துள்ள பதிலில், கடந்த ஆண்டு அக்டோபர் வரையில், அசாஞ்சே தொடர்பாக, தூதரகப் பாதுகாப்புக்காக செலவான தொகை 9 மில்லியன் பவுண்டுகள் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இப்போது அசாஞ்சே பாதுகாப்புச் செலவு 10 மில்லியன் பவுண்டை கடந்திருக்கும் என ஸ்காட்லாந்து யார்டு வட்டாரங்கள் தெரிவித்தன.