எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தால் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
கெய்ரோவில் உள்ள ஏர் டிபன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த கால்பந்து போட்டியில் ‘எகிப்து பிரீமியர் லீக் கிளப் ஜமாலிக்’ அணியுடன் ‘ஈ.என்.பி.பி.ஐ.’ அணி மோதியது. போட்டி நடந்து கொண்டிருந்த போது ‘ஜமாலிக்’ அணியின் ஆதரவாளர்கள் டிக்கெட் இல்லாமல் ஸ்டேடியத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் ஜமாலிக் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை உபயோகித்தனர்.
இன்று காலை நிலவரப்படி இந்த கலவரத்தில் 14 பேர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 8 பேர் இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சுமார் 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கலவரத்தை அடுத்து கால்பந்து போட்டித்தொடர் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட ஜமாலிக் அணி ஆதரவாளர்கள் 17 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.