சிரியா ராணுவத்துடன் ஒருங்கிணைந்து போரிடாவிட்டால் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரால் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை வெல்ல முடியாது என்று சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் கூறினார்.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் சிரியா மற்றும் இராக்கில் உள்ள ஐ.எஸ். நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நிகழ்த்தி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தத் தாக்குதல்கள் தொடங்கின.
இந்த நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸில், பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அல்-அசாத் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கூட்டுப் படையினர் நிகழ்த்தும் தாக்குதல்கள் தொடர்பாக சிரியாவுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக, அமெரிக்கா அல்லது பிற நாடுகளுடன் பேச்சு எதுவும் நடைபெறுவதில்லை. தாக்குதல் குறித்து எங்களுக்குத் தகவல் அளிக்கப்படும், அவ்வளவுதான்.
அந்தத் தாக்குதல்களால் மட்டும் ஐ.எஸ்.ஸை வென்றுவிட முடியாது.
சிரியா ராணுவத்தினருடன் சர்வதேச கூட்டுப் படையினர் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்காவிட்டால் ஐ.எஸ்.ஸை வெல்ல முடியாது என்றார்.
ஆனால் ஐ.எஸ். மீதான தாக்குதலில், சிரியாவுடன் இணைந்து செயல்பட முடியாது என்று அமெரிக்கா ஏற்கெனவே திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இந்நிலையில் சிரியா-கூட்டுப்படை ஒருங்கிணைந்து செயல்படுவது எப்படி சாத்தியம் என கேட்டபோது அவர் கூறியதாவது:
தரையில் சிரியாவின் ராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு அளிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். கூட்டுப் படையில் சேர மாட்டோம். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கூட்டணியுடன் சேர எங்களுக்கு விருப்பமில்லை என்றார் அவர்.
சிரியா அரசுக்கு எதிராகப் போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை அல்-அசாத் அவ்வாறு குறிப்பிட்டார்.