வடக்கு மாகாண சபையில் சமீபத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், இறுதிகட்ட போரின் போது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டிருந்தது.
அது குறித்து முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா சிங்கள ஊடகத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வடக்கு மாகாண முதல்–அமைச்சர் விக்னேஸ்வரன், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி, இனவாதத்தை தூண்டி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. விக்னேஸ்வரன் அவ்வாறு செய்வது நியாயமற்றது.
மக்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கி லாபங்களைப் பெற்றுக்கொள்ள விக்னேஸ்வரன் முயற்சிப்பது தவறாகும். நான் அதனை அவருக்கு நினைவுபடுத்துகின்றேன்.
தரைவழி போரை நானே வடிவமைத்து திட்டமிட்டேன், ராணுவத்துக்கு நானே உத்தரவு பிறப்பித்தேன். கீழ்மட்ட உறுப்பினர்களுக்கு நானே ஆணை வழங்கினேன். இந்த போரை நன்றாக கண்காணித்தேன்.
எனவே, மனித படுகொலைகள் இடம்பெறவில்லை என்பது எனக்குத் தெரியும். சிவில் மக்களை பாதுகாக்க நாம் முன்னின்று செயற்பட்டோம். 2,75,000 மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தோம்.
சிவில் போர்களின் போது பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்ற போதிலும் எல்லா காரணங்களையும் கருத்தில் கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் போர் செய்தோம்.
விக்னேஸ்வரன் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சித்தால் அது குறித்து நான் வருந்துகின்றேன்.
வடக்கு மக்களின் நலனில் விக்னேஸ்வரன் கரிசனை கொண்டிருந்தால், தெற்கு மக்களின் மனதில் சந்தேகம் எழக்கூடிய வகையில் செயற்படக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.