இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா 4 நாள்கள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கிறார்.
முதலில் புது தில்லி செல்லும் சிறீசேனா, மறுநாள் திங்கள்கிழமை, இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். பெளத்தர்களின் புனிதத் தலமான புத்த கயாவுக்கும், திருப்பதிக்கும் செவ்வாய்கிழமை பயணம் மேற்கொள்கிறார். புதன்கிழமை (18ஆம் தேதி) கொழும்பு திரும்புகிறார்.
இந்தப் பயணம் குறித்து, இலங்கை வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
சிறீசேனா பயணத்தின் போது, உடன்படிக்கைகள், கட்டமைப்புப் பணிகள் ஆகியவை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.
இலங்கை நல்லிணக்க நடவடிக்கை, பொருளாதாரம், அமைதி உள்பட அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார். சென்ற மாதம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.