காதலர் தினத்தன்று கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் பொதுமக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தற்கொலை செய்து கொள்ள இருவர் திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டதாக அந்த நாட்டு போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
டிம்பர்லி நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞரும், அமெரிக்காவின் இல்லினாய் மாகாணம், ஜெனீவா நகரைச் சேர்ந்த 23 வயது பெண்ணும் ஹாலிஃபாக்ஸ் நகரில் காதலர் தினத்தன்று பொதுமக்களை சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல திட்டம் தீட்டியிருந்தனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தங்களைத் தாங்களே சுட்டுத் தற்கொலை செய்துகொள்ளவும் அவர்கள் தீர்மானித்திருந்தனர். இந்த சதித் திட்டத்துக்கு மேலும் இருவர் உடந்தையாக இருந்தனர்.
எனினும், தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த 19 வயது இளைஞர் வெள்ளிக்கிழமை ஒரு இல்லத்தில் பிணமாகக் கிடந்தார்.
அதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் இந்த சதித் திட்டம் கண்டறியப்பட்டு உடனடியாக இதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் மிகப் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சதித் திட்டத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.