அதிபர் போரோஷெங்கோவின் உத்தரவை தொடர்ந்து உக்ரைனில் உள்நாட்டு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது. அங்கு குண்டுவீச்சு நடைபெறவில்லை.
உக்ரைனின் தன்னாட்சி பகுதியான கிரிமியா, பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷியாவுடன் இணைந்தது. அதே போன்று கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ரஷியாவுடன் இணைய விரும்பி உக்ரைன் படையினருடன் ஆயுத மோதல்களில் ஈடுபட்டனர். லுஹான்ஸ்க், டன்ட்ஸ்க் ஆகிய இரு முக்கிய நகரங்கள் உள்பட பல்வேறு பகுதிகளை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பிடித்தனர். ஏறத்தாழ ஓராண்டு காலமாக நடந்து வந்த இந்த உள்நாட்டு போரில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு, ரஷியா படையினரையும், ஆயுதங்களையும் தந்து உதவுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின. ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் அவை விதித்தன.
இதற்கிடையே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர பெலாரஸ் நாட்டின் தலைநகரான மின்ஸ்க் நகரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், பிரான்சு அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 16 மணி நேரம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி 15-ந் தேதி முதல் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று முடிவானது.
ஆனால் போர் நிறுத்தத்துக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 27 பேர் கொல்லப்பட்டனர். இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவில் போர் நிறுத்த உத்தரவினை உக்ரைன் படையினருக்கு பிறப்பித்தார். அப்போது அவர், “(போர் நிறுத்த உடன்படிக்கையின்) முதல் நடவடிக்கையாக உக்ரைன் படைகள் நள்ளிரவு முதல் சண்டையை நிறுத்த வேண்டும்” என கூறினார்.