எகிப்திய கிறிஸ்தவர்களை லிபியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்ததையடுத்து, தீவிரவாதிகள் மீது வான்வெளித் தாக்குதல் நடத்தியதாக எகிப்து தெரிவித்துள்ளது.
அதிகாலை நடத்தப்பட்ட இந்த வான்வெளித் தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம்கள், பயிற்சி நிலையங்கள், ஆயுதக் கிடங்குகள் ஆகியவை இலக்காக வைத்து தாக்கப்பட்டது என்று எகிப்து ராணுவம் கூறியுள்ளது.
லிபியாவிற்கு வேலை தெடிச்சென்ற 21 எகிப்திய கிறிஸ்தவர்கள் பல வாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இந்நிலையில், கடற்கரையில் அழைத்துச் செல்லப்படும் 21 எகிப்திய கிறிஸ்தவர்கள் மண்டியிட வைக்கப்பட்டு தலை துண்டித்து கொல்லப்படும் வீடியோவை நேற்று தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
இதையடுத்து, பதில் நடவடிக்கை எடுப்போம் என்று எகிப்திய அதிபர் அப்தல் ஃபத்தா அல் சிசி தீவிரவாதிகளை எச்சரித்திருந்த நிலையில் தற்போது அங்கு எகிப்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.