ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவிருந்த இலங்கை போர்க் குற்ற அறிக்கை, ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக, திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் உயரதிகாரி ஜெயிடு ராத் அல் ஹுசைன் திங்கள்கிழமை கூறியதாவது:
வரும் மார்ச் மாதம் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 28வது ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. இது ஆறு மாதம் ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இலங்கையில் புதிதாக பொறுப்பேற்ற அரசு இதுகுறித்து மேலும் விரிவான உள்நாட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தது. இதன் மூலம் புதிய தகவல்கள் வெளிவரக்கூடும் என்ற அடிப்படையில் இந்த கால நீட்டிப்பு செய்யப்படுவதாக ஜெயிடு ராத் தெரிவித்தார்.