ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்ட அறிவிப்பு வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில், கடந்த 2011-12 ஆண்டுகளில், அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பெருமளவில் போராட்டங்களை நடத்திக் காட்டி, பிரபலமானவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இவர் ஊழலுக்கு எதிரானவரும் ஆவார். இப்போது புதினுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். அடுத்த மாதம் 1-ந் தேதி அவர், மாஸ்கோவில் 1 லட்சம் பேரை திரட்டி மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டார்.
இது குறித்து தனது ‘டுவிட்டர்’ இணையதள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்ட அவர், ‘நாடடில் நிலவும் அரசியல், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எனவே நெருக்கடிக்கு எதிராக பேரணி நடத்தப்படும்’ என்று கூறி இருந்தார்.
எண்ணெய் விலை சரிவு, உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை ஆகியவற்றின் காரணமாக ரஷியா பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், நெருக்கடி எதிர்ப்பு பேரணி என்ற பெயரில், அலெக்சி நவால்னி பேரணி நடத்தவிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷியாவில் பேரணி, போராட்டங்களுக்கு சட்டப்பூர்வமான தடை உள்ளது.
ஆனால் அலெக்சி நவால்னி தடையை கண்டுகொள்ளாமல், பேரணி தொடர்பாக மாஸ்கோவில் உள்ள சுரங்க ரெயில் நிலையத்தில் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, மாஸ்கோ மாவட்ட கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார்.