இலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மிக உயரிய பதவிகளும் வழங்கப்பட்டன.
அவ்வாறு அவர்கள் தூதர்களாக பணியாற்றிய போது, பல்வேறு நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், இலங்கை அதிபராக சிறீசேனா பொறுப்பேற்றதும் இந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு அந்நாட்டு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதன்படி தாய்லாந்து, பாகிஸ்தான், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரிகளான சாந்தா கொட்டேகோடா, வசந்த கரணகோடா, திஸரா சமரசிங்கே, ஜெயலாத் வீரக்கோடி ஆகியோரிடம் அந்நாட்டு நிதி முறைகேடு குற்றப் புலனாய்வு போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக முன்னாள் அதிபர் ராஜபட்சவின் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0