உலகில் உள்ள சில நாடுகளின் சர்ச்சைக்குரிய அதிபர்களில் இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிறிசேனவும் ஒருவர். மிகவும் எளிமையானவர் என்றும் மிகவும் மென்மையானவர் என்றும் ஈழத் தமிழ் தலைவர்களே புகழ்ந்த மைத்திரிபாலா, கடந்த ஆண்டு, அக்டோர் மாதம் ராஜபக்சவுடன் இணைந்து சதிப் புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்த்தார். ராஜபக்சேவை பிரதமராக்கினார். இதனால் உலகின் கவனிப்புக்கு உள்ளான மைத்திரிபாலா, தற்போது 43 ஆண்டுகளின் பின், இலங்கையில் மரண தண்டனை சட்டத்தை நிறைவேற்ற இணங்கியுள்ளார்.
இலங்கையில் இறுதியாக 43 வருடங்களின் முன்னர்தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இலங்கைத் தீவில், 1681இல் முதன் முதலில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றவாளியாக கருதப்பட்ட ஒருவரை யானையை மிதிக்கச் செய்து மரண தண்டனை வழங்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புக்களில் அறிய முடிகின்றது. பிரித்தானிய சிலோனில் மரண தண்டனை அரசியல் சட்டத்தில் இடம்பெற்றது. பிரித்தானியர்களால் இலங்கை விடுவிக்கப்பட்ட பின்னரும் அந்த சட்டம் அப்படியே இருந்தது.
இறுதியாக 1976இல் கொந்த பப்புவா என்ற சிங்கள மரண தண்டனைக் கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு இலங்கையில் மரண தண்டனைக்கு எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டன. அத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிபர்கள் எவரும் மரண தண்டனை நிறைவேற்றும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கையெழுத்து இடவில்லை. இலங்கையில் உள்ள சிறைகளில் 500 மரண தண்டனைக் கைதிகள் காணப்படுவதாக சிறைச்சாலை புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இலங்கையில் சட்ட விரோத போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக மரண தண்டனையை அமுல்படுத்தப் போவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார். சட்ட விரோத போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிக்க அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பதே தீர்வு என்றும் மைத்திரிபாலா கூறி வருகின்றார். கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற மைத்திரிபாலா ஒப்புதல் அளித்துள்ளார்.
மரண தண்டனையை நிறைவேற்ற அலுக்கோசு என்ற அரச உத்தியோகத்தர்களும் 43 ஆண்டுகளுக்கு பின்னர், பதவிக்கு விண்ணப்பித்து வேலையில் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், முதன் முதலாக மரண தண்டனை நிறைவேற்றுவுள்ள, 18 மரண தண்டனை கைதிகளின் பெயர் விபரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில் பதினாறு பேர் தமிழ் பேசுபவர்கள். நான்கு பேர் சிங்களர்கள். ஆறு தமிழர்களும் ஆறு முஸ்லீம்களுமாய் 16 தமிழ்பேசுவோர். தமிழர்கள் சிறுபான்மையராக உள்ள நாட்டில் சிறிசேனவின் மரண தண்டனைப் பட்டியில் மாத்திரம் தமிழர்களுக்கு அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறிசேனவின் இந்த நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. மரண தண்டனையை நடைமுறைப்படுத்தினால், இலங்கை தனிமைப்பட நேரிடும் என்றும் அதனால் பல விளைவுகளை சந்திக்கும் என்றும் ஜெர்மனி எச்சரித்துள்ளது. உலகம் மரண தண்டனையை ஒழித்து வரும் நிலையில் மிகவும் இழிவான, மனிதாபிமானற்ற தண்டனயை முறையை சிறிசேன கையில் எடுத்திருப்பது அவர் மீது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை கூறியுள்ளது.
இதேவேளை இலங்கையில் உயிர்கொலைகளை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருப்பது, இந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடமில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றது. சிறிசேன இந்த திட்டத்தை நிறைவேற்ற நினைத்தாலும், பாராளுமன்றத்தில் அதற்கு ஆதரவு கிடைக்க வாய்ப்புக்கள் இல்லை என்றே தென்படுகின்றது.
இலங்கையில் ராஜபக்சே அதிபராக பொறுப்பேற்றவுடன், நாய்களை கொல்லுவதற்கு தடை விதித்தார். ஆனால் அவரது ஆட்சியில்தான் சுமார் இரண்டு லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். ஈழத் தமிழர்கள் என்றால் கொன்றழிக்கலாம் என்ற எழுதப்படாத மரண தண்டனை சட்டம் ஒன்று இதற்கு முன்னரும் நடைமுறையில் இருந்தது இலங்கையில். அப்போது சர்வதேச நாடுகளும் இலங்கையை எச்சரிக்கவில்லை.
எப்படியிருப்பினும், உயிர்கொலைகளை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். ஈழத் தமிழ் இனத்தை, ஒரு இனமாக, கூட்டாக அழித்தவர்கள் ஆட்சி புரியும் நாட்டில், முதலில் அந்த மனித இனப் படுகொலையாளிகளுக்குத்தான் மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
நன்றி – குமுதம்