“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவால் வெல்ல முடியாது. அவர் நிச்சயம் தோல்வியடைவார்.” இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதித் தேர்தல் என்றால் அதற்குத் தகுதியான வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி களமிறக்கியிருக்க வேண்டும். அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ச தனது தம்பி தோல்வியடைவார் என்று தெரிந்தும்கூட கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளார். ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே அதிகாரப் போர் மூண்டுள்ளது என்பது இதனூடாகத் தெளிவாகின்றது.
கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமை இன்னமும் இரத்துச் செய்யப்பட்டவில்லை. அவர் இப்போதும் அமெரிக்கக் குடியுரிமை கொண்ட நபராகவே உள்ளார். அப்படிப்பட்ட ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் எப்படிப் போட்டியிடப் போகின்றார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது” – என்றார்.