மகாவலி அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு புனித ராஜப்பர் ஆலய முன்றலில் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி, முல்லைத்தீவு நகர் வழியாக மாவட்ட செயலகம் வரை சென்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்த பேரணியை மாவட்ட செயலகத்திற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அத்தோடு, குறித்த பகுதிக்கு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பான மகஜரை கையளிப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபரை குறித்த இடத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் அந்த இடத்திற்கு வந்த மாவட்ட செயலாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் மக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வாசித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர்
போராட்டத்தின்போது ‘எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும்’, ‘எமது மண்ணை ஆக்கிரமிப்பதை நிறுத்து’, ‘திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பை நிறுத்து’, ‘அரசே எமது பூர்வீக நிலத்தை எமக்கு தா’, ‘இலங்கை அரசே எமது மண்ணில் மகாவலியை நிறுத்து’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.
அத்தோடு, ‘வேண்டும் வேண்டும் எமது நிலம் எமக்கு வேண்டும்’, ‘எமது கடல் வளம் எமக்கு வேண்டும்’ என பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் சுமார் 300 பேர் வரையில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.