தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தலில் 12ஆம் நாளான இறுதிநாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர்கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்த தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கட்சி பேதங்களைக் கடந்து மிகவும் எழுச்சிப்பூர்வமாக இடம்பெற்றது.
நல்லூரில் தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் இன்று (விாழக்கிழமை) காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில், திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட நேரமான காலை 10.45 மணிக்கு பொதுச் சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பொதுச் சுடரினினை மாவீரர் ஒருவரின் தாயார் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளின்றி மிகவும் உணர்வு பூர்வமாக மலரஞ்சலி அஞ்சலி செலுத்தினர்.
யாழ். மாநகர முதல்வர், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இணைந்து ஒற்றுமையாகவும் உணர்வுபூர்வமாகவும் நிணைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன் தமிழர் தாயகம் எங்கும் தியாகி திலீபனின் நினைவுநாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பெருந்திரளான மக்கள் இதில் எழுச்சியுடன் பங்கெடுத்திருந்தனர். அதன் புகைப்படத் தொகுப்பு.