– ஐ.நா. ஆணையாளருக்கும் மனு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி தமிழர் தாயகத்தில் தொடர் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றுப் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்பு ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.
நல்லூர் சங்கிலியன் பூங்காவிலிருந்து ஆரம்பித்த ஊர்வலம் நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. செயற்றிட்டக் கிளை அலுவலகம் வரை சென்றது.
நாட்டில் சுதந்திரம் என்பது சிங்கள மக்களுக்கு மட்டும்தானா?, வர வேண்டும் வர வேண்டும் சர்வதேசம் வர வேண்டும், எங்கே உறவுகள் எங்கே?, அரசியல் கைதிகளை விடுவியுங்கள் என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறும், வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியவாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தின் முடிவில் ஐ.நா. செயற்றிட்டக் கிளை அலுவலகப் பொறுப்பதிகாரியிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்குப் பெயரிடப்பட்டுள்ள அந்த மனுவில், பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை பிரயோசனமற்ற வகையில் மனித உரிமைகள் சபையில் முடக்கி வைத்திருப்பது பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு இழைக்கப்படும் அநீதியாகும். பொறுப்புக்கூறலும், தமிழ் மக்களுககுரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் – முழுமையான சர்வதேச குற்றவியல் விசாரணை ஊடாக மட்டுமே சாத்தியமாகும். தங்களது தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 43ஆவது கூட்டத் தொடர் நிறைவடைவதற்குள் அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாகவோ நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” – என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.