இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக நாளைய தினத்திலிருந்து பாடசாலைகளை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளார். அதுதவிர இலங்கையில் 29 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெற்றோர்கள் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பீதியடைந்துள்ளதை கருத்திற்கொண்டும் வைரஸில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.