சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பயம் தொற்றிக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து பயணிகள் அமெரிக்கா வருவதற்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளா்.
இந்தநிலையில் அமெரிக்காவும், கனடாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடாவும், அமெரிக்காவும் எல்லையை மூட முடிவெடுத்தன.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோவும் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற எந்த பொருட்களையும் இருநாடுகளும் தற்காலிகமாக பகிர்ந்து கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இருநாடுகளும் எல்லையை மூடுவது என்றும், தேவையின்றி மக்கள் எல்லை தாண்டி செல்வதை கட்டுப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கனடா பிரதமர் ட்ரூடோ கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை குறித்து ட்ரம்புடன் பேசினேன். இருநாடுகளும் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.