பிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தகட்ட அறிகுறிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிரதமர், வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல், லண்டனில் உள்ள செயின்ட் தொமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு உட்பட்டிருந்தார்.
இதேவேளை “இன்று பிற்பகலில், பிரதமரின் நிலை மோசமடைந்துள்ளதனை அடுத்து, அவரது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில், அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். நாட்டின் முதன்மைச் செயலாளராக இருக்கும் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் (Foreign Secretary Dominic Raab), தனக்கு பதிலாக கடமைகளை மேற்கொள்வார் என பிரதமர் கேட்டுக்கொண்டார்” என டவுனிங் ஸ்றீற் 10 இன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் “பிரதமர் சிறந்த கவனிப்புக்கு உட்பட்டுள்ளார், அனைத்து தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்குk; நன்றி.” எனவும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டள்ளார்.