இன்றைய காலம் என்பது உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் மிகவும் நெருக்கடியான காலமே. உயிர், வாழ்வு, பொருளாதாரம், கலை என்று எல்லாமே முடங்கியிருக்கின்ற இந்த தருணங்களில் ஏழைய எளிய மக்களின் வாழ்வுதான் கடுமையாய் கசங்கி இருக்கிறது.
ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்ட எம் மக்களை கொரோனா பேரிடர் காலமும் கடுமையாய் வாட்டுகின்றது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக கொரோனா துன்புறுத்துகின்றது எனலாம்.
இலங்கை அரசாங்கம் இக் காலத்தில் பல நிவாரணங்களை அறிவித்தாலும் தமிழர்களின் மண்ணுக்கு வெறும் அறிவிப்பு மாத்திரமே கேட்கிறது. இதிலும் பாரட்சம் பல காரணங்களை சொல்லி மக்களை ஒதுக்குகின்றது.
இந்த நிலையில், தாயகத்தில் உள்ள தன்னார்வ இளைஞர்களாலும் புலம்பெயர் தேசங்களில் உள்ள அமைப்புக்களினாலும் தாயக மக்களுக்காக இடர்காலத் தொண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புலம்பெயர் தேசங்களில் கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக பெரும் அசௌகரியங்களின் மத்தியில் உயிரிழப்பையும் உழைப்பிழப்பையும் சந்தித்து வரும் புலம்பெயர் உறவுகள் இந்தக் காலத்திலும் தாயக மக்களுக்கு உதவுவது என்பது பகுத்துண்ணலின் உன்னத பண்பாகும்.
கனடாவை தளமாக கொண்டு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பில் மனிதநேய தொண்டுப் பணிகளை முன்னெடுத்து வரும் அமைப்புத்தான், அகவம்.
கனேடிய தமிழர் நினைவெழுச்சி அகவம் அமைப்பு தாயகத்தில் அதிலும் தென் தமிழீழத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு கொரோனா இடர்காலத்தில் உதவிகளை வழங்கியிருக்கின்றது.
சிங்களக் குடியேற்றங்களாலும் மதமாற்றங்களாலும் மெல்ல மெல்ல தின்னப்படும் தென் தமிழீழ கிராமங்களில் அகவத்தின் பார்வை பட்டிருப்பது உண்மையில் அந்த மக்களுக்கு பெரும் கைகொடுத்தல் ஆகும்.
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, திருக்கோயில் முதலிய பிரதேசங்களை சேர்ந்த 200 குடும்பங்களுக்கு அடிப்படை தேவையான உலருணவுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் அடுத்த கட்ட நிவாரணப் பணிகளும் அங்கே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதுபோன்று திருக்கோணமலை மாவட்டத்தின் உள்ள நல்லூர் மற்றும் பாரதிபுரம் முதலிய கிராமங்களிலும் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து அல்லல்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது வரையில் நல்லூர், நீலாங்கேணி, வீரமாநகர் முதலிய இடங்களில் 600 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பாட்டாளிபுரம், இலக்கந்தை, தென்னமரவாடி முதலிய கிராமங்களில் 510 குடும்பங்களுக்கு உதவிகள் இவ்வாரம் வழங்கப்பட்டுகின்றன. அதேபோன்று அம்பாறை மாவட்டத்திலும் கண்ணகிபுரம், சித்தானைகுட்டிபுரம், காஞ்சூரங்குடா, விநாயகபுரம் முதலிய கிராமங்களில் 307 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அன்னமலை, மத்தியமுகாம், சவளக்கடை, சொறிகல்முனை, நாவிதன்வெளி முதலிய கிராமங்களில் 430 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழஙக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீனவர்கள், விவசாயிகள், ஏனைய கூலித் தொழிலாளர்கள் என முழுக்க முழுக்க நாளாந்த வாழ்வாத தொழிலை கொண்ட இந்த மக்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாய் தொடரும் ஊரடங்கால் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் உள்ளனர்.
இவர்களுக்கு தற்போது முதலாவது கட்டமாக ஒரு வார காலத்திற்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தேசத்திலிருந்து கண்ணுக்கு எட்டாமல் வெகுதூரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த இந்த மக்களுக்கான உதவியானது காலப் பொருத்தமிக்க சேவையாகும்.
இன்றைய இடர்காலத்தின் போதும், இலங்கை அரசு தமிழ் மக்களை பாரமுகம் கொண்டே பார்க்கின்றது. இராணுவம் தனது ஆக்கிரமிப்பு கரம் கொண்டே ஒடுக்குகின்றது. இக் காலத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்கு இவ்வாரான உதவிகளை செய்வது அவர்களின் மீள் எழுச்சிக்கு உதவும்.
யாவருக்கும் உணவளிக்கும் பகிரந்துண்ணும் மிகப் பெரிய மாண்பை, அதிலும் பொருத்தமான பகுதியில் பொருத்தமான கிராமங்களில், பொருத்தமான மக்களுக்கு செய்த உதவியானது காலத்தால் மறக்க முடியாத பேருதவியாகும்.
வணக்கம் லண்டனுக்காக பார்த்தீபன்