யாழில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக எவரும் பீதியடையத் தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வெலிக்கந்தை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தவர்கள் ஐவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வைரஸ் கண்டறியப்பட்டதாக (Positive) பொசிற்றிவ் என அறிக்கை வந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில், “இவ்வாறு கொரோனா தொற்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தவர்கள் ஐவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வைரஸ் கண்டறியப்பட்டது (Positive) என அறிக்கை வந்துள்ளது. எனினும் அது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புறோம்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சருக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். அவர்கள் ஐவரயையும் அவர்களது குடும்பத்துடன் அவர்களது வீடுகளில் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளோம். ஐந்து பேருக்கும் 14 நாட்களின் பின்னர் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
எனவே, இதுதொடர்பாக யாழ்ப்பாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் உலக நாடுகளில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களுக்கும் தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் பரிசோதனையில் தொற்று என அறிக்கை வந்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா தொற்று நோயை இல்லாதொழிக்க நீண்டகாலம் செல்லும். எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்வதன் மூலமே கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.